விநாயகர் துதி

மங்களத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா !
பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினமே
சங்கரனார் தருமதலாய் சங்கடத்தை சஞ்சரிக்கும்
எங்கள் குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே! – அரோகரா

அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி
ஒப்பில்லா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து
எப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென
அப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே! – அரோகரா

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்கி உக்கியிட்டு
எள்ளவும் சலியாத எம் மனதை உமதாக்கி
தெள்ளியனாய் தெளிவதற்கு தேன் தமிழில் மாலையிட்டு
உள்ளியதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே! – அரோகரா

இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்று கணபதியே போற்றியெனப் போற்றுகின்றேன்! – அரோகரா

விநாயகர் வணக்கம்

வா வா கஜமுகனே வா – வரம் அருள
வா வா கஜமுகனே வா

ஒற்றை கொம்பொடித்து – சுவாமியே
ஓம் எனும் பிரணவம் தந்தாய்
வற்றாத நதியாக – சுவாமியே
வந்தெம்மை ஆதரிப்பாய் – (வா வா கஜமுகனே)

சக்தியின் மகனானாய் – சுவாமியே
சண்முகன் அண்ணணனாய்
சிவனுக்கு மகனானாய் – எங்கள்
சிறப்புக்கு நீயானாய் – (வா வா கஜமுகனே)

ஆற்றங்கரையினிலும் – சுவாமியே
அரச மரத்தினிலும்
ஊராணிக்கரையினிலும் – இருந்து
ஊழ்வினை தீர்ப்பவனே – (வா வா கஜமுகனே)

அப்பமும் பொரிகடலை – அதனோடு
அவலும் படைத்து வைத்தேன்
ஒப்பில்லா மோதகமும் – சுவாமியே
உனக்கே எடுத்து வைத்தேன் – (வா வா கஜமுகனே)

பேழை வயிற்றோனே – சுவாமியே
பெருச்சாளி வாகனனே
மூலப் பரம்பொருளே – சுவாமியே
மூஷிக வாகனனே – (வா வா கஜமுகனே)

ஆனந்தம் ஆனந்தம் – சுவாமியே
ஆனந்தம் ஆனந்தம்
ஆதரிப்பாய் சுவாமி – எங்களை
நீ ஆதரிப்பாய் சுவாமி – (வா வா கஜமுகனே)

விநாயகர் ஸ்லோகம்

ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகந்தனை ஞானகொழுந்தனை
புந்தியில் வைத்தடிப் போற்றுகின்றேனே

திருவாக்கும் செய்கருமம் கைக்கூடும்
செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும்
கருவாக்கும் ஆதலால் வானோரும்
ஆணை முகத்தானைக் காதாலால் கூப்புவர்தம் கை

அற்புதக் கீர்த்தி வேண்டின்
ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின்
நலமெல்லாம் பெருக வேண்டின்
கற்பக மூற்த்தி தெய்வக் களஞ்சியத்
திருக்கை சென்று பொற்பதம் பணிந்து
பொய்யில்லை கண்ட உண்மை

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
இவை நாங்கும் கலந்துனக்கு நான் தருவேன்
கோலஞ்செய் துங்க கரிமுகத்து தூமணியே
நீயெனக்கு சங்கத் தமிழ் மூன்றுந்தா

ஆடியபாதா நீடிய கருண ஆனைமுத்தோனே
தேடிய போது ரகசியமுடனே சீக்கிரம்நீ வருவாய்
பாடிய நாவும் சூடிய தமிழும் பகரும் பெருமாளே
நாடிய சூடிய நாவிலு கந்தருள் நல்லவி நாயகனே

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனித்தும் பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் அருளைத் தரும் பிள்ளையார் – (பிள்ளையார்)


ஆற்றங்கரை அருகிலும் அரசமரத்து நிழலிலும்
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார் – (பிள்ளையார்)


ஆறுமுக வேலவனின் அண்ணனா பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும் தீர்த்துவைக்கும் பிள்ளையார் – (பிள்ளையார்)


மஞ்சளிலே செய்திடினும் மண்ணினாலே செய்திடினும்
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில்காட்டும் பிள்ளையார் – (பிள்ளையார்)


அவல்பொறி கடலையும் அரிசி கொழுக்கட்டையும்
கவலையின்றி உண்ணுவார் கண்ணை மூடிதூங்குவார் – (பிள்ளையார்)


கலியுகத்தின் விந்தையை காணவேண்டி அனுதினம்
எலியின் மீது ஏறியே இஷ்டம் போல சுற்றுவார் – (பிள்ளையார்)

Call