அம்மன் பாடல்கள்

ஸ்ரீ தையல் நாயகி அம்மன்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் (கோரஸ்)

(1)

எள்ளுப்பூ மூக்கு எளிற்க் குவளையாம்ப் பூக்கண்கள்
இயல்பான அழகு வடிவம்!
இனிய முகம் தாமரை! இருசெவிகள் செந்தாழை
இறைவி நிறம் நல்ல பவளம்

கள்ளிருக்கும் ரோஜாப்பூக் கன்னங்கள் அல்லியில்
கடைந்த்தோர் இரண்டி கால்கள்
கைகளும் விரல்களும் கனகாம்பரம் மல்லி
கற்பகம் பூவில் தோள்கள்

புள்ளிருக்கும் வேளூர் பூவையுடன் அங்கமெல்லாம்
பூக்களாய் மலர்ந்திருக்க
பூவுடல் கொண்டவளை வர்ணித்து பாமாலை
பூ மாலையோடு தந்தேன்

வள்ளவள் உன் அருளால் வரும் துயரை போக்கியொரு
வரம் தந்து காக்க வருவாய் – அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே – ஓம் சக்தி

(2)

பால்கேட்டு அழுததோர் பிள்ளைக்குச் சீர்காழிப்
படித்துறையில் பால் கொடுத்தாய்
பச்சைவெற் றிலை கவிகாள மேகத்தைப்
பாட்டரசன் ஆக்கி வைத்தாய்

வேல்கேட்ட பிள்ளைக்குச் செந்தூரில் சமர் செய்ய
விருப்பமுடன் வேல் கொடுத்தாய்
விளையாடும் ஏழரைச் சனியோடு கிரகங்கள்
விலகிடும் வழி அமைத்தாய்

நூல்கேட்ட ஞானத்தில் நூறுகவி பாடுமெனை
நோக்கி நீஎது கொடுத்தாய்
நொடிப்பொழுதில் என்வாழ்வில் படிப்படியாய் துயரங்கள்
நுழைவதற்கு ஏன் விடுத்தாய்

வாழ்வரசி இனி எனது வருங்காலம் செல்வங்கள்
“வளம்காலம்” ஆக்க வருவாய் – அம்மா
வைதீஸ்வரன் கோவில் வளர்தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே – ஓம் சக்தி

(3)

தா என்று கேட்டவுடன் கொடுப்பதனால் தானுன்னைத்
“தாய்” என்று சொல்லிவைத்தார்!
தலைமகனுன் சந்நிதியில் கலைமகளின் அருளாலே
தமிழ் பாடி வரங்கள் பெற்றார்

சேய் ஒன்று எதிரினிலே கதறுவது கேட்காமல்
செவிமூடி நிற்க லாமோ
சிறுபிழைகள் இருந்தாலும் மன்னித்து அருள் காட்டும்
தேவியவள் நீயல் லவோ

ஆயக்கலை அத்தனையும் அறிந்தவனை நோய்நொடிகள்
அணுகவிடல் முறையாகுமோ
அறியாதோர் செய்வத்தை உரியமகன் ஏற்காமல்
அணு தினமும் வாடலமோ

வாயுவென வேகமாய் வந்தெனது துயர் தீர்த்து
மகிழ்ச்சியெனக் கொடுக்க வருவாய் – அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர்த்தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே – ஓம் சக்தி

(4)

தங்க நிகர் குணத்தோடு தைறியமும் தருகின்ற
தமிழ்ச் செல்வி போற்றி போற்றி
தரணியில் புகள்ழ்கான வரமளிக்கும் சுந்தரியாம்
தாமரைப்பூ மாது போற்றி

மங்கையர்க்கு மாலைகளும் மன்னவற்கு வேலைகளும்
மகிழ்ந்தளிக்கும் அரசி போற்றி
மாதரசி உண்ணா மலைஅழகு சிவகாமி
மங்கை மீனாக்ஷி போற்றி

பொங்கிவரும் துயரத்தை பொடியாக்க வரும்
அன்னபூரணி கல்யாணி போற்றி
யோகமுடன் வாழ்வுதரும் பூங்கொடியாம் விசாலாட்சி
புனித உமாதேவி போற்றி

மங்களங்கள் அத்தனையும் எங்களது விடுவர
மாதரசி கூட்டி வருவாய் – அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர்த்தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே – ஓம் சக்தி

(5)

மலைபோன்ற செல்வத்தை குவித்து வைத்திருந்து நான்
மற்றவருக்கு உதவ வேண்டும்
மழலையின் குணத்தோடு முதுமையிலும் இளமையாய்
மகிழ்வோடு வாழ வேண்டும்

கலைத்தவளும் மேடை யெல்லாம் பூமாலை அணிந்து
கௌரவம் காண வேண்டும்
கவிபாடும் எனது குரல் கேட்டவுடன் தெய்வமெல்லாம்
காட்சி தந்து அருள வேண்டும்

நிலையான புகழ் தந்து உற்றாரும் மற்றாரும்
நேசிக்கும் உறவு வேண்டும்
நீ எனது துணையாகி நான் செல்லும் பாதைக்கு
நேர் வழிகள் காட்டவேண்டும்

விளையாடும் கரத்தழகி பகை வென்று எந்நாளும்
மறுக்காமல் காக்க வருவாய் – அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர்த்தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே – ஓம் சக்தி

(6)

சிறுவயதில் உன்பெருமை தெரிந்திருந்தாலுன்னைச்
சேவித்து மகிழ்ந்தி ருப்பேன்
தெரியாமல் செய்தபிழை அத்தனையும் மன்னிக்கத்
தேடிவந்து அழுதி ருப்பேன்

புரியாமல் எடுத்தயிப்பிரவிதனில் மங்கையரின்
போகத்தை அளந்தி ருப்பேன்
பொன்னோடும் பெண்ணோடும் வருமின்பம் போதுமெனப்
புரியாமல் வாழ்ந்தி ருந்தேன்

திருநாளில் உன்பெருமை தெரிந்ததும் தொடர்ந்து நான்
செவ்வாயில் விரதம் வைத்தேன்
தித்திக்கும் அருள் தன்னை சித்திக்க வரம்வேண்டி
சிங்காரப் பாட்டி சித்தேன்

பருவத்தில் நான்செய்த பாவத்தை மன்னித்துப்
பாவை நீ காக்க வருவாய் – அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர்த்தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே – ஓம் சக்தி

(7)

திருக்கழுக் குன்றத்தில் கழுகுக்கும் மதியத்தில்
தினந்தோறும் சோறு உண்டு
திருநாளாம் பொங்ககளில் நந்தியெனும் மாட்டுக்கும்
தித்திக்கும் பொங்கலில் உண்டு

வருஷத்தில் ஒரு நாளில் வடையோடு அன்னத்தை
வைரவரும் காண்ப துண்டு
வளர்கின்ற புற்றுக்குள் ஒளிகின்ற பாம்புக்கும்
வார்க்கின்ற பாலு முண்டு

அர்ச்சித்து வழிபட்டு அன்னையே உன்னையெண்ணும்
அடியேனுக் கென்ன உண்டு
அன்று தினம் அளந்தபடி என்றைக்கும் நடந்திடவே
அருள்புரிய வேண்டும் அம்மா

மரம் வைத்த நீதானே தண்ணீரும் விடவேண்டும்
மறந்திடல் முறையாகுமோ – அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர்த்தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே – ஓம் சக்தி

(8)

கழுதையெனும் பிறவியை எடுத்தாலோ நிச்சயம்
கழுத்திலே பொத்தியிருக்கும்
காளைமாடாகவே பிறந்திடின் நிச்சயம்
கழனியில் கால் இருக்கும்

பழுதான பிறவியாம் நாயாகப் பிறந்தாலோ
பகலிரவு விழிக்க வேண்டும்
பறவையாம் பிறந்தாலும் மரங்களின் உச்சியில்
பத்தியங்கள் போட வேண்டும்

அழுதாலும் தொழுதாலும் அன்னையே உனையின்றி
யாரெனக் குதவு வார்கள்
ஆறறிவு கொண்டதோர் மனிதனாய் என்னைநீ
அகிலத்தில் படைத்த பின்னால்

வழிகாட்ட மறுப்பதும் நியாயமா என்விழியில்
வடிந்து நீர் ஓடலாமா – அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர்த்தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே – ஓம் சக்தி

(9)

புல்லாகிப் பூடாகிப் புழுவாகி இருந்தாலோ
புலம்பியே தீர வேண்டும்!
பொன்னாக அணிகின்ற மனிதனாய்ப் பிறந்த நான்
புதுயுகம் காண வேண்டும்!

கல்லாகி நின்கின்ற தெய்வம் நீ இல்லையெனக்
காட்டிட விரைந்து வருக!
கனதனம் நீ தந்து காசினியில் புகழ்தந்து
காவலாய் நின்று அருள்க!

முள்ளாக மலராக மோதிடும் வாழ்கையில்
முற்றும் நான் நம்பி வந்தேன்!
மோதக பிரியனின் தாயான உன்னிடம்
முறையீடு செய் கின்றேன்!

பல்லக்கு பரிவாரம் பார்த்திடும் ராஜாங்க
பவனியை எனக்கு அருள்க – அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர்த்தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே – ஓம் சக்தி

(10)

எவருக்கு எது வேண்டும் என்பதை அறிந்துநீ
ஏறிட்டுப் பார்க்க வில்லை!
இருகரம் கூப்பியுன் சந்நிதியில் நிற்கும் நான்
எதுகேட்டும் மாறவில்லை!

சிவல்புரியில் வாழ்கின்ற சிங்காரம் தந்ததோர்
செந்தமிழ் கவிதை மூலம்!
சீர்கொண்ட பதிகங்கள் பத்தையும் கேட்டுநீ
சிரமத்தை அகற்ற வேண்டும்!

கவலைக்கு மருந்தாகும் கடவுளே உனை நம்பி
காலங்கள் போக்கி விட்டேன்!
காப்பற்ற வேண்டியது உன்பொறுப் பல்லாது
காசினியில் யார் பொறுப்பு!

மகன் கேட்டு தாய்எதுவும் மறப்பதும் முறையில்லை
மனமிரங்கி வந்து அருள்க! – அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர்த்தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே – ஓம் சக்தி

வருக வருக வருக வருக வடியுடையம்மா – வரம்
தருக தருக தருக தருக வடியுடையம்மா

ஈஸ்வரனின் இதயத்தி நீ எழில் ஓவியமே
அழகைசொட்டும் அருளைச்சொட்டும் அருளோவியமே
மாலையின் கண் மயக்குகின்ற மணக்கும் ரோஜா நீ
மகிழ்ச்சி பொங்க அனைவரையும் வாழவைப்பாய் நீ – (வருக)

சொத்து சுகம் தருபவளே சொர்ணாம்பிகே
சொக்கநாதன் தனை கவர்ந்த மீனாம்பிகே
சோலை தனி தவழ்ந்து வரும் இளந்தென்றல் நீ – அம்மா
சோறாது சொந்தம் எம்மைக்காப்பாயே நீ– (வருக)

ஐமுகனாம் முக்கண்ணன் ஈசனிடம் நீ
அடங்கிவிட்ட அழகென்ன அர்த்தநாரியே
ஐங்கரனை ஆறுமுகனை அழைத்தால் நல்ல
ஆயிரமாம் கோடி மக்கள் எம்மையும் பாரு– (வருக)

ஊனம் ஊமை குருடு செவிடு எல்லா நோயுமே – அம்மா
உன் நாமம் உரைப்பதனால் ஓடிப்போகுமே
அன்னை சக்தி உலகத்தை நீ ஆட்டி வைக்கிறாய்
அல்லும் பகலும் உன்னை எண்ணி பாடவேண்டுமே– (வருக)

பாலகனாம் முருகனுக்கும் வேலினை கொடுத்தாய்
பாவியராம் மக்கள் எம்மை பார்க்கவும் மறந்தாய்
ஓர நியாயம் செய்வதிலே உனக்கு நிகரும் யார்
இளையவனாம் முருகனை நீ ஏய்த்தவள் தானே– (வருக)

தடையின்றி வரம் தருவாய் தவம் புரிந்தோர்க்கு
கவிபாடி நிற்கின்றேன் காட்சி அருள்வாய்
ஓங்கார சக்தியே உன் ஓர விழியிலே
ஒருமறை நோக்க நான் சரண் புகுந்தேனே– (வருக)

Call